ஒரு மனிதன் தன் சாதியைப் பெருமைப்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் சாதி வரிசைப்படி மதிப்பீடு செய்ய முயன்றான். முதலில் பிராமணர்கள்; அடுத்தது வீரர்கள்; க்ஷத்திரியர்கள்; பின்னர் வர்த்தக, வாணிபங்களில் ஈடுபடும் வைசியர்கள்; நான்காவது, மேலுள்ள மூவருக்கும் சேவை செய்யும் சூத்திரர்கள். ஒருவரிடம் அவர்களின் குடும்பப் பெயரை கேட்டு, அது எந்த சாதியைச் சேர்ந்தது என்று ஆய்வு செய்து, அதன்படி அவர்களை நடத்துவான். அவன் வசிக்கும் நகரத்துக்கு கிறிஸ்தவர் ஒருவர் ஒருநாள் குடியேறி, அவனது அண்டைக்காரர் ஆனார். அந்த கிறிஸ்தவரின் சாதி எது என்று தெரிந்துகொள்ள அவன் மிகவும் ஆவலாயிருந்தான். ஆனால், அவர் வழக்கமான குடும்பப் பெயர் எதுவும் இல்லாமல், மேசியா (இயேசு) என்பதைப் பயன்படுத்தினார். இதனால் குழம்பிய அவன், அவரின் சொந்த ஊர், முன்னோர்கள், அவர்கள் செய்த தொழில்… போன்றவற்றைத் தொடர்ச்சியாக கேட்டுப் பார்த்தான். ஒருநாள் அந்த கிறிஸ்தவர் அமைதியாக, “என் குடும்பப் பெயர் ஆதாம்,” என்று கூறினார்.
உலகின் சிருஷ்டிப்பு:
வேதாகமத்தின் முதல் அதிகாரம் வானத்தையும் பூமியையும், நிலத்தையும், சமுத்திரங்களையும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், செடிகள், பறவைகள், மீன்கள், மிருகங்கள் ஆகிய அனைத்தையும் படைத்ததைக் குறிப்பிடுகிறது. இறுதியில் மனிதனைப் படைத்தார். இவ்வுலகை மனிதன் வாழ ஏற்றவாறு தேவன் ஆயத்தம் செய்தார். ஏதேன் தோட்டம் என்ற சிறப்பு இல்லத்தையும் உருவாக்கினார். ஆறு நாட்களில் தேவன் அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். மனிதருக்கும் ஓய்வு கட்டாயம் என்பதை அந்நாளில் நிறுவினார். உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் ஏழு நாள் ஒழுங்கு இருக்கிறது; அது வேதாகமத்தின் சிருஷ்டிப்பைச் சுட்டிக்காட்டுகிறது (ஆதியாகமம் 1).
முதல் தம்பதியர் சிருஷ்டிப்பு:
தேவன் அனைத்து படைப்பையும் இல்லாதவற்றிலிருந்து தனது வார்த்தை மூலம் படைத்தார். ஆனால், மனிதனைத் தன் சாயலில் படைக்கும்போது, மண்ணை ‘மூலப் பொருளாக’ பயன்படுத்தினார். “தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்” (ஆதி 2:7). ஏதேன் தோட்டம் என்ற பரதீசில் கூட ஆதாம் தனிமையை உணர்ந்தான். ஆதாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, தேவன் அவனது ஓர் எலும்பை எடுத்துக் கொண்டு ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கினார். இவ்வாறு, தேவனால் படைக்கப்பட்ட முதல் மனித தம்பதியர் ஆகியோர் உருவானார்கள் (ஆதி 2:21-22).
ஆதாமின் சந்ததியர்:
ஆதாம் மற்றும் ஏவாள் என்ற முதல் மனித தம்பதியரிடமிருந்து அனைத்து மனிதரும் வந்தவர்கள். தேசியம், இனம், சாதி, சமூகத் தரம், கலாச்சாரம், மொழி எதுவாயினும் மனிதர்கள் அனைவரும் ஒரே மனிதக் குடும்பத்தினர் என்ற உண்மையை இது காட்டுகிறது.
எல்லா மனிதர்களும் முதல் தம்பதியரின் சந்ததிகள் என்று நான் நம்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran