பல நாடுகளில் தெய்வநிந்தனைச் சட்டங்கள் உள்ளன. ஒரு நபர் மதத் தலைவர்களைப் பற்றி எதிர்மறையாகப் பேசினால் அல்லது அவர்களின் உணர்வுகளை புண்படுத்தினால், அது தெய்வநிந்தனையாகக் கருதப்படுகிறது. இதற்கான தண்டனை சில நேரங்களில் மரணதண்டனையாக இருக்கலாம். ஆனால் வேதாகம சத்தியம், முழு மனிதகுலத்தையும் தெய்வநிந்தனையாளர்களாகவே கண்டிக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார்; “நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை” (1 யோவான் 1:10). ஆக, தன்னை பாவியென்று ஒப்புக்கொள்ளாத எந்தவொரு மனிதனும், தேவனை பொய்யாளன் எனக் கூறுகிறவனாகவே இருக்கிறான்.
பரம்பரையாக வந்த பாவம்:
ஆதாம் மற்றும் ஏவாள் தேவனுக்கு எதிராகக் குற்றம் புரிந்து, அவர் சொல்பவைகளுக்கு விரோதமாக நடந்துகொண்டார்கள் (1 யோவான் 3:4; ஆதியாகமம் 3). பவுல் எழுதுகிறார், ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படிதலின்மை காரணமாக பாவம் உலகில் மரபாக வந்தது (ரோமர் 5:12). மனிதர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து உடற்கூறு அம்சங்களை மரபாக பெறுவது போல, எல்லாரும் ஆதாம் மற்றும் ஏவாளிடம் இருந்து பாவ இயல்பை மரபாகப் பெறுகிறார்கள். எல்லாரும் பாவம் செய்துள்ளனர்; தேவனுடைய மகிமையை அடைய முடியாதவர்களாகி விட்டனர் (ரோமர் 3:23).
செயல்படுத்தப்பட்ட பாவம்:
அனைத்து மனிதர்களும் தினசரி வாழ்வில் பாவம் செய்கிறார்கள். இது பத்து கட்டளைகளுக்கு எதிரான ஒரு மீறலாக இருக்கலாம். நெறிமுறைகள் மற்றும் ஒழுங்கியல் தவறுகள், வேண்டுமென்றே செய்யப்படும் பாவங்களாகும்.
உள்மனத் தீய விருப்பமான பாவம்:
சில பாவங்கள் வெளிப்படையாக செய்யப்படவில்லை என்றாலும், சிந்தனைகளில் உருவாகின்றன. தேவனுடைய பார்வையில், இவை கூட பாவங்களாகவே கருதப்படுகின்றன. ஒரு ஆண், ஒரு பெண்ணைப் பற்றித் தீய நோக்கத்துடன் பார்ப்பின், அவன் ஏற்கனவே அவளுடன் விபசாரம் செய்துவிட்டான்; அதுபோல ஒரு பெண்ணும் தீய எண்ணத்துடன் ஒரு ஆணை அணுகினால் அதுவும் விபச்சாரமே (மத்தேயு 5:28). மனிதன் தன்னை எப்போதும் நீதிமானாகவே நினைக்கிறான்; ஆனால் தேவன் இருதயத்தை பரிசோதிக்கிறார் (நீதிமொழிகள் 21:2).
தவறவிட்ட பாவம்:
ஒரு நபருக்கு அறிவும், வளமும், அதிகாரமும் இருக்கும்போது, அவற்றை மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பை தவிர்த்து விடுவதோ, தன்னால் இயன்றும், அதை செய்யாமல் இருப்பதோ, தேவனை எதிர்த்து செய்யும் பாவமாகும் (யாக்கோபு 4:17). பொதுமக்களுக்கு பல நன்மைகள், திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் இருக்கின்றன. ஆனால் அவை நிர்வாகிகளால் வழங்கப்படுவதில்லை. மக்களுக்கு சேவை செய்யாமல் இருப்பது, தேவனுக்கு எதிராக செய்யப்படும் பாவமாகும்.
நிராகரிப்பு ஒரு பாவம்:
மிகவும் மோசமான பாவம் என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பதுதான். பாவிகளுக்கும் தேவனுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் வழியை இயேசு கிறிஸ்து ஏற்படுத்தியுள்ளார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்தார், சிலுவையில் மரணமடைந்தார், அடக்கம் செய்யப்பட்டார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார், இரட்சிப்புக்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மாத்திரமே.
நான் என் பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவைப் பெறுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran