பாவத்தைப் பற்றி பெருமையடித்தல்

இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான, ஆரியன் ஆனந்த் என்ற மாணவன், போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள புகழ்பெற்ற லேஹி பல்கலைக்கழகத்தில் இலவசமாகப் படித்தது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஏமாற்று வேலைகள் மூலம் அங்கே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளது இப்போது ரெட்டிட் என்ற சமூக வலைத்தளம் மூலம் வெளி உலகத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முழு உதவித்தொகையைப் பெறுவதற்காக கல்விப் பதிவுகள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்திற்கும் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளான்.  அவன் தனது சமூக ஊடகத்தில், "நான் என் வாழ்க்கையையும் தொழிலையும் பொய்களால் கட்டமைத்தேன்”, இது ஒரு பெரிய சாதனை என்று தற்பெருமையாக பதிவு செய்துள்ளான். ஆரியன் ஆனந்த கைது செய்யப்பட்டான், ஆனால் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பேரில், அவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூன் 28, 2024). 

தவறான அடித்தளம்: 
பொய் என்பது வாழ்க்கைக்கான அடித்தளமாகவோ அல்லது ஒரு தொழில்  முன்னேற்றமாகவோ இருக்க முடியாது.  இத்தகைய அடித்தளங்கள் மணல் மீது கட்டப்பட்டுள்ளன, அவை கரைந்தே போய் விடும். தேவனின் வார்த்தையான பாறையின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை,  அனைத்து புயல்களையும் தாங்கும் (மத்தேயு 7:24-26).  

தவறான ஆவணங்கள்: 
இந்த பையனுக்கு ஒரு பெரிய ஆசை இருந்தது.   வெளிநாடு சென்று கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி இதை அடைய விரும்பினான்.   இருப்பினும், இதற்கான வழிமுறை தவறாக இருந்தது. அறிவுசார் விஷயங்களுக்காக அல்லது திறமை அல்லது சில திறன்களை அங்கீகரித்து நிறுவனங்களால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆரியன் ஆனந்தோ போலி ஆவணங்களை உருவாக்கி தன்னைத்தானே சான்றளித்துக்கொண்டான்.  

தந்தையையும் விடவில்லை: 
துரதிர்ஷ்டவசமாக, ஆரியன் ஆனந்த் உயிருடன் இருந்த தனது தந்தைக்கு போலி இறப்பு சான்றிதழ் பெற்றான்.   வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரியன் ஆனந்த் தனது கனவை நனவாக்க தந்தையை கொலை செய்தான். அநேகமாக, அவன் செய்ததை அவனது பெற்றோர்கள் அங்கீகரித்திருக்கலாம்.   இல்லையெனில், இதுபோன்ற போலி ஆவணங்களை தனியாளாக தயாரித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. 

தற்பெருமை:  
இந்தச் சிறுவன் பலவிதமான காரியங்களைச் சாதிக்கும் வீரனாகப் புகழ் பெற விரும்பினான். பகட்டு என்பது பெருமையின் வெளிப்பாடாகும், மேலும் பெருமை வீழ்ச்சிக்கு முன் செல்கிறது (நீதிமொழிகள் 16:18). தான் செய்த செயல்களை நினைத்து வெட்கப்படுவதற்குப் பதிலாக, அவன்  தீய செயல்களைப் பற்றி பெருமிதம் கொண்டான்.

தேவ அருள்:  
தமக்குத் தாமே உதவி செய்து கொள்பவர்களுக்குத்தான் கடவுள் உதவி செய்கிறார் என்று ஆரியன் ஆனந்த நினைத்தான். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதன் மூலம், கடவுளுக்குப் பிரியமானவனாகி விட்டான் என்று எண்ணினான். 

தோல்வியுற்ற தத்துவம்: 
தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 14:11). சிறந்த பொருட்களால் கட்டப்பட்ட வீடு மற்றும் வலுவான அடித்தளம் தேவனின் தீர்ப்பால் அழிக்கப்படும்.  நீதிமான்கள் குடிசையில் கூட வாழலாம், ஆனால் அங்கே தேவனின் தயவால் செழிப்பான வாழ்வு காணப்படும். 

நான் ஒரு பரிசுத்தமான, உண்மையுள்ள வாழ்க்கையை நடத்துகிறேனா? 
 

Author: Rev. Dr. J .N. மனோகரன்