வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் பொட்டாசியத்துடன், மிகச் சிறிய அளவில் கதிரியக்கத் தன்மை கொண்ட பொட்டாசியமும் (Radioactive Potassium) உள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை. மனித உடலிலேயே இயற்கையாக சிறிதளவு கதிரியக்கத் தன்மை உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அது எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. ஒரே நேரத்தில் சுமார் பத்து இலட்சம் வாழைப்பழங்களை ஒருவர் சாப்பிட்டால்தான் கதிர்வீச்சின் தாக்கத்தால் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சாபத்திற்குள்ளான உலகம்:
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின், தேவன் பூமியைச் சபித்தார் (ஆதியாகமம் 3:17). அதன் விளைவாக, மனிதனுக்கு நன்மை பயக்கும்படி படைக்கப்பட்ட பல படைப்புகள் முழுமையான பயனை அளிக்காதவையாகவோ அல்லது தீங்கு விளைவிப்பவையாகவோ மாறின. நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் பல நுண்ணுயிரிகள் பாவத்தின் விளைவாக அழிவை ஏற்படுத்தும் தன்மையைப் பெற்றன. அவற்றின் தாக்கம் மாறுபட்டாலும், இன்று மனிதர்களையும் விலங்குகளையும் பல நோய்களின் மூலம் பாதித்து உயிரிழப்பிற்குக் காரணமாகின்றன.
குறைபாடுள்ள உலகம்:
பாவத்தின் காரணமாக உலகம் முழுமையற்றதாக மாறியது. ஏதேன் தோட்டத்தின் நிறைவான ஆசீர்வாதத்திற்குப் பதிலாக, முள்ளும் முட்செடிகளும் முளைக்கத் தொடங்கின (ஆதியாகமம் 3:18). நவீன அறிவியல் விவசாய விளைச்சலை அதிகரிக்க உதவினாலும், தேவன் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த முழுமையான நிலையை எட்ட முடியவில்லை. சிறந்த திட்டமிடல், மேலாண்மை, தொழில்நுட்பம் இருந்தாலும் குறைபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆகையால், இந்தப் படைப்பு முழுவதும் கர்த்தரின் இரண்டாம் வருகையை ஏக்கத்தோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது (ரோமர் 8:19).
கறைபட்ட மனிதர்கள்:
பாவத்தின் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது மனிதகுலமே. "நீங்கள் தேவனைப்போல் இருப்பீர்கள்" என்று சாத்தான் வாக்குறுதி அளித்தான் (ஆதியாகமம் 3:5). ஆனால் உண்மையில் மனிதனின் ஆவிக்குரிய கண்களை அவன் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4). ஆகவே, எல்லா மனிதர்களும் தேவனுக்கு முன்பாகப் பாவிகளே. மனிதன் தன்னை நீதிமான் என்று கருதினாலும், அவனுடைய நீதியான செயல்கள்கூட தேவனுடைய பரிசுத்தத்தின் முன் கறைபட்ட ஆடையைப் போன்றவை; ஆம், அழுக்கான கந்தை (ஏசாயா 64:6). மனிதன் பாவச் செயல்களைச் செய்வதால் மட்டுமல்ல; அவனுடைய இயல்பே பாவத்தால் கறைபட்டிருப்பதால் அவன் பாவம் செய்கிறான்.
உலகத்தில் வாழும் கிறிஸ்துவின் சீஷர்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் இந்த உண்மைகளை அறிந்திருக்க வேண்டும். எல்லா மனிதர்களும் பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்தவர்களே (ரோமர் 3:23). எனவே எந்த மனிதனையும் முழுமையாக நம்ப முடியாது. நண்பர்களாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் முழு நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் (மீகா 7:5). முழுமையாக நம்பத்தகுந்தவர் கர்த்தர் ஒருவரே. இந்தப் பாவமயமான உலகில் நாம் நூறு சதவீத நிறைவை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், நம்மில் தொடங்கிய நற்செயலை தேவன் நிறைவேற்றி, தம் சித்தத்தின்படி நம்மை பரிபூரணமாக்குவார் (பிலிப்பியர் 1:6).
சிந்தனைக்கு:
பாவத்தால் சாபமடைந்த இந்தக் குறைபாடுள்ள உலகிலும், தேவனுடைய கிருபையை நான் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேனா?
Rev. Dr. C. Rajasekaran