ஆன்லைன் தளங்களில் பல கற்பனை விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று (டிரீம்) Dream 11, இதற்கு 200 மில்லியன் (20 கோடி) பயனர்கள் உள்ளனர். இதில் ஒருவர் ஒரு அணி, ஒரு போட்டி, ஒரு விளையாட்டு முறையை தேர்ந்தெடுத்து பணம் பந்தயம் வைத்து வெல்லலாம் அல்லது தோற்கலாம். இது சமூக ஊடகத் தளங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட சூதாட்டமாகும். சாத்தான் எப்போதும் பணத்தின் வேடத்தில் வந்து, மக்களை தேவனிடமிருந்து விலக்க முயல்கிறான்.
பேராசையில் பயிற்சி பெறுதல்:
துரதிருஷ்டவசமாக, சில போதகர்கள் கூட இந்த விளையாட்டுகளில் பங்கேற்று பணத்தை இழந்துள்ளனர். பல இளைஞர்களும் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார்கள். வேறு சிலர் விரைவில் பணக்காரராக வேண்டுமென்று லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். இன்று சமூக ஊடகங்களும் வணிகச் சந்தைகளும் மனிதர்களை பேராசையில் பயிற்சி பெறச் செய்கின்றன (2 பேதுரு 2:14).
பேராசை:
எளிதாக பணம் சம்பாதிப்பது அல்லது விரைவில் பணக்காரராகிறதென்பது நேர்மையற்ற வழிகளில் செய்வதைக் குறிக்கிறது. இப்படியான செல்வம் விரைவில் அழிந்துபோய்விடும் (நீதிமொழிகள் 13:11). நேர்மையற்ற வழிகளில் சம்பாதிப்பதற்குள் கொடுமை, அநியாயம், வஞ்சனை, பொய், சூழ்ச்சி, மிரட்டல், ஆசை உந்துதல், அதிர்ஷ்டம் போன்றவையும் அடங்கும். அந்த வகையான செல்வத்தின் தொடக்கம் ஆசீர்வாதமாகத் தோன்றலாம், ஆனால் அதன் முடிவு அப்படி இருக்காது (நீதிமொழிகள் 20:21). பேராசை உருவ வழிபாட்டிற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது (கொலோசெயர் 3:5).
மற்றவர்களின் இழப்பில் ஆதாயம்:
ஒவ்வொரு லாட்டரி வெற்றியாளருக்கும், அதற்குப் பின்னால் பத்து லட்சம் தோல்வியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் தாம் வெற்றியாளராக வேண்டும் என்பதால், ஒருவர் சில பணத்தை முதலீடு செய்கிறார், ஆனால் இறுதியில் அதை இழக்கிறார். இது மற்றவர்கள் இழப்பின் மூலமாக லாபம் தேடுவதாகிறது. இது பிறருக்கு உதவி செய்வதும், தாராள மனப்பான்மையைக் காட்டுவதற்குப் பதிலாக; பிறரை கொள்ளையடிப்பதை நியாயமாக்கும் செயலாகிறது.
நேர இழப்பு:
தாம் வளர்ச்சியடைய தேவசம்பந்தமான நல்ல காரியங்களில் நேரத்தை முதலீடு செய்வதற்குப் பதிலாக, கற்பனையான விளையாட்டுகளில் நேரம் வீணாகிறது.
நேரம் என்பது தேவனால் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கொடையாகும். ஒவ்வொருவரும் தேவனிடம் தனது நேரத்தின் பயனுக்குப் பொறுப்பாளி. சீஷர்கள் நேரத்தின் நிர்வாகிகளாக இருக்கின்றனர்; எனவே நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது ஒரு முக்கிய ஆவிக்குரிய ஒழுக்கமாகும்.
நேரத்துடன் சேர்த்து, இத்தகைய பயனற்ற விளையாட்டுகள் பணத்தையும் இழக்கச் செய்கின்றன.
நோக்கமற்ற செயல்பாடுகள்:
சீஷர்கள் தேவராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கப்படைக்கப்பட்டவர்கள். தேவராஜ்யமே அவர்களின் முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும்; சுயநல ஆசைகள், விருப்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கற்பனைகள் அல்ல (மத்தேயு 6:33).
தேவராஜ்ய குடிமக்களாக வாழ்ந்து, பிறரையும் தேவராஜ்யத்திற்குள் அழைப்பதற்குப் பதிலாக, சீஷர்கள் அர்த்தமற்ற விஷயங்களில் கவனம் சிதறப் பண்ணுகின்றனர்.
விக்கிரகம்:
ஒருவரது நேரம், சக்தி, வளங்கள் (பணம் உட்பட) அனைத்தையும் பயனற்ற வகையில் அழிக்கும் எதுவும் அந்நபரின் விக்கிரகமாக மாறிவிடுகிறது. பேராசை என்பது உள்ளத்திலுள்ள விருப்பம்; கனவு விளையாட்டுகள் அந்த ஆசையின் பொருளாகும். இந்த விருப்பமும், கனவுகளும் சேர்ந்து ஒருவருடைய வாழ்க்கையில் விக்கிரகங்களாக அல்லது சிலை வழிபாடு போல மாறிவிடுகின்றன.
நான் போதை தரும் மற்றும் அழிவுகரமான விளையாட்டுகளுக்கு அடிமையா?
Rev. Dr. J.N. Manokaran