கிபியோன் - சாபம் ஆசீர்வாதமாக மாறியது

யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியபோது, ​​அவர்கள் முதலில் எரிகோவை தோற்கடித்தனர். ஆகானின் பாவத்தினால் சில தடைகள் இருந்தபோதிலும், அடுத்து ஜெயித்தது  ஆய் பட்டணம் (யோசுவா 9). இப்படி எரிகோவையும் ஆயியையும் ஜெயித்ததால் கிபியோனியர் கில்காலின் முகாமுக்கு வந்து, தாங்கள் தொலைதூர நாட்டிலிருந்து வந்ததாகவும், கர்த்தருடைய நாமத்தைக் கேட்டு, இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்ய விரும்புவதாகவும் யோசுவாவிடம் சொன்னார்கள்.   தேய்ந்து போன காலணிகள், பூசணம் பூத்த உணவு போன்றவற்றின் பொருள் ஆதாரங்களை தலைவர்கள் கண்டனர்; கிட்டத்தட்ட சரிபார்த்தனர்.  இருப்பினும், அவர்கள் கர்த்தரிடமிருந்து ஆலோசனையைப் பெறவில்லை, அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் அல்லது அழிக்கப்பட மாட்டார்கள் என்று யோசுவா செய்த வாக்குறுதிக்கு இஸ்ரவேல் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  

கிபியோனுக்கு பயணம்:  
இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர்.  அதாவது அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் முணுமுணுத்தார்கள், ஒருவேளை உடன்படிக்கையின் காரணமாக அவர்களால் கொள்ளையடிக்க முடியவில்லையே என வருந்தியிருப்பார்களோ. யோசுவா கிபியோனியர்களிடம், அவர்கள் ஏமாற்றியதால் அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்றார், அது மாத்திரமல்ல, வாக்குறுதி அளித்ததால் இனி அவர்களிடம் போரிடாமல் அவர்கள் தங்களுக்கு பணியாட்களாக (அடிமைகளாக) இருப்பார்கள்,  குறிப்பாகக் கூடாரத்திற்கு விறகு வெட்டுபவர்களாக மற்றும் தண்ணீர் சுமப்பவர்களாக என யோசுவா ஜனங்களிடம் தெரிவித்தார்.  

 ஒரு ஆசாரிய நகரம்:  
 தாவீது மற்றும் சாலொமோனின் நாட்களில் உடன்படிக்கைப் பெட்டி கிபியோனில் தங்கியிருந்தது (1 நாளாகமம் 16:39-40; 21:29).

வல்லமையுள்ள மனிதன்:  
கிபியோனியனான இஸ்மாயா 30 வீரர்களில் வல்லவன்; இவன் தான் தாவீது ராஜாவுக்கு சேவை செய்த ஒரு வலிமைமிக்க மனிதன் (1 நாளாகமம் 12:4).

சாலொமோனின் வேண்டுதல்: 
தேவன் தோன்றி கிபியோனில் சாலொமோனிடம் பேசினார் (1 இராஜாக்கள் 3:4-5).

தீர்க்கதரிசிகள்:  
கிபியோன் நகரம் அசூரின் மகன் அனனியா போன்ற தீர்க்கதரிசிகளையும் உருவாக்கியது, பின்னர் அவர் ஒரு தவறான தீர்க்கதரிசி ஆனார் (எரேமியா 28:1).

மீட்பின் கதை:  
கிபியோனியர்கள் தேவனின் இரக்கம், கிருபை மற்றும் அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவர்கள்.   கிபியோனியர்கள் இஸ்ரவேலின் தேவனைப் பற்றி கேள்விப்பட்டார்கள்.   அவர்கள் அவருடைய மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலரிடம் பாதுகாப்பையும் உடன்படிக்கையையும் தேடி வந்தனர்.   மனித கண்ணோட்டத்தில் இது ஒரு ஏமாற்றுத்தனம் என்றாலும், தேவன் நம்பிக்கையின் ஒரு சுவடு அல்லது கடுகளவான விதையைக் கண்டார்.  இஸ்ரவேல் முணுமுணுத்தாலும், யோசுவா அவர்களை அடிமைத்தனத்திற்கு சபித்தாலும், தேவன் அவர்களை மன்னித்து, அவர்களை மாற்றினார், அந்த நகரம் இஸ்ரேலின் வரலாற்றில் ஒரு பெரிய பங்களிப்பாளராக இருந்தது.  சவுல் ராஜா சில கிபியோனியர்களைக் கொன்றான், இஸ்ரவேல் தேசம் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு யோசுவா செய்திருந்த உடன்படிக்கையை (வாக்கை) மீறியதற்காக பஞ்சத்தை அனுபவித்தது (2 சாமுவேல் 21:1).

தேவனின் அன்பு, கிருபை, ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பை நான் என் வாழ்க்கையில் உணர்ந்து கனப்படுத்துகிறேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்