தீங்கு விளைவிப்பதற்கான மாபெரும் ஆற்றல்

உலகப் புகழ்பெற்ற உளவியல் அறிஞர் ஜோர்டன் பீட்டர்சன் கூறுகிறார்; "தீமை செய்யும் மிகப்பெரிய திறன் மனிதனுக்கே உண்டு. உயிரினங்களின் உலகில் இது மனிதனுக்கே உரிய ஒரு தனித்துவமான பண்பாகும். நாம் என்ன செய்கிறோம் என்பதை முழுமையாக அறிந்திருந்தும், விருப்பத்தோடும் திட்டமிட்டும் தீமையைச் செய்கிறோம். சில நேரங்களில் கவனக்குறைவினாலு, அலட்சியத்தினாலும், உண்மையை அறிய விரும்பாத மனநிலையினாலும் தீமை செய்கிறோம்". அப்போஸ்தலனாகிய பவுல், மனிதனின் விருப்பங்கள் நல்லவையாகவும் நோக்கங்கள் உயர்ந்தவையாகவும் இருக்கலாம்; ஆனால் அவற்றை நிறைவேற்றும் வல்லமை அவனுக்குள் இல்லை என்று கூறுகிறார். அதற்குக் காரணம், "பாவம் என்னுள் வாசமாயிருக்கிறது" என்பதே (ரோமர் 7:15–20).

தீமை செய்யும் திறன்:
மனிதன் விருப்பத்தோடும், திட்டமிட்டும், உணர்ந்தும், சில சமயங்களில் அறியாமையாலும், அலட்சியத்தாலும், குருட்டுத்தனத்தாலும் தீமையைச் செய்யக்கூடியவன். பரிசுத்தமான தேவனை அறியாதபோதோ அல்லது அவரை நிராகரிக்கும்போதோ, மனிதன் ஒழுக்கக்கேட்டின் ஆழத்திற்கு விழுந்துவிடுகிறான்.
அகந்தை, கொடூரம், அதிகார வெறி கொண்ட மனிதர்கள் சமூகங்களையும் நாடுகளையும் பேரழிவுக்குள்ளாக்க முடியும். தேவனற்ற சித்தாந்தங்களான பாசிசம் (Fascism), மார்க்கிசம் (Marxism), நாசிசம் (Nazism) போன்றவை இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிகொண்ட கொலை இயந்திரங்களாக மாறின.

பாவிகள்:
எல்லா மனிதர்களும் பாவிகள் என்றும், தேவனுக்குப் பிரியமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான நன்மையைத் தங்கள் சொந்த வல்லமையால் செய்ய இயலாதவர்கள் என்றும் பவுல் தெளிவாகக் கூறுகிறார். மனிதர்கள் தாங்கள் நீதியான செயல்கள் என்று கருதுபவைகள்கூட தேவனுடைய பார்வையில் "அசுத்தமான ஆடை" போன்றவை (ஏசாயா 64:6). எனவே, தங்களுடைய சொந்த நீதியினாலோ, தகுதியினாலோ, கிரியைகளினாலோ யாரும் நீதிமான்களாக முடியாது. "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகியிருக்கிறார்கள்" (ரோமர் 3:23).

மீட்பின் வல்லமை:
பரிசுத்தமான தேவன் மனிதனுக்குப் பாவமன்னிப்பையும், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் அருளியிருக்கிறார். இயல்பாகவே மனிதனின் செயல்கள் பாவத்தை நோக்கியவை. ஆகவே அவனுக்கு பாவமன்னிப்பு அவசியம்; இல்லையெனில் தேவனுடைய கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனந்திரும்பி, விசுவாசத்தோடு அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவருடைய பாவங்களையும், அவருடைய இரத்தம் முற்றிலும் சுத்திகரிக்கிறது. (1 யோவான் 1:7)

ஜெயங்கொள்ளும் வல்லமை: 
இவ்வாறு கிறிஸ்துவை விசுவாசிக்கும் மக்கள், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வார்த்தையினாலும் சாத்தானை மேற்கொள்கிறார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 12:11).
அவர்கள் இனி சாத்தானின் கையில் உதவியற்ற பலிகடாக்கள் அல்ல; மாறாக, கிறிஸ்து இயேசுவுக்குள் வெற்றியாளர்கள், ஜெயங்கொள்ளுகிறவர்கள், மேற்கொள்ளுகிறவர்கள் ஆவார்கள்.

சிந்தனைக்காக:
நான் பரிசுத்தமான தேவனுடைய கரங்களில் நீதியின் கருவியாக மாறியிருக்கிறேனா? (ரோமர் 6:13)
 

Rev. Dr. J.N. Manokaran