முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்வது பொருத்தமானதே. ஆரம்ப கிறிஸ்துமஸ் காலத்தில் வாழ்த்து அட்டைகள் என்ற பாரம்பரியம் இல்லை; மின்னணு (E-cards) அட்டைகளும் அப்போது இல்லை. பிரதான தூதன் காபிரியேல் மரியாளிடம் அறிவித்த அறிவிப்பிலிருந்து தொடங்கிய முதல் கிறிஸ்துமஸ் காலத்தின் செய்தி இதுதான்; “பயப்படாதே.”
பயம் என்பது மனிதனை முற்றிலும் முடக்கிவிடக்கூடிய ஒரு உணர்வு. இன்று அந்த பயமே உலகை ஆட்கொண்டு வருகிறது. மனிதர்கள் எதற்கெதற்கோ மற்றும் எல்லாவற்றிற்கும் பயப்படுகிறார்கள். குற்றங்கள், போர்கள், வன்முறைகள், மனிதனால் உண்டாகும் பேரழிவுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பயம் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் ஒரு மகத்தான செய்தியை முழங்குகிறது; “பயப்படாதே”.

மரியாள்:
நாசரேத்தில் வாழ்ந்த ஒரு தாழ்மையான இளம் பெண்ணுக்கு விண்ணுலகத்திலிருந்து ஒரு தூதன் வந்தார். பிரதான தூதரான காபிரியேல். அவளுக்கு பயம் ஏற்பட்டது. ஆனால் தூதன் அவளை அமைதிப்படுத்தி, அவள் தேவனால் கிருபை பெற்றவளாகவும், அவருடைய வாக்குறுதியையும் நோக்கத்தையும் நிறைவேற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவளாகவும் இருப்பதை விளக்கினார்
(லூக்கா 1:26–38). அவள் மேசியாவாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தாயாக இருப்பாள் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது மரியாள், “நான் கன்னியாக இருக்கிற நிலையில், இது எவ்வாறு நிகழும்?” என்று கேட்டாள். அதற்கு காபிரியேல்,“பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்று விளக்கினார்.

யோசேப்பு:
மரியாளுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த யோசேப்பு நீதிமானாக இருந்தார். மரியாள் கர்ப்பமடைந்த செய்தியை அறிந்தபோது அவர் மனதில் குழப்பம் ஏற்பட்டது. அவளை மறைவாக விட்டுவிட நினைத்தார். ஆனால் கனவில் கர்த்தருடைய தூதன் அவருக்குத் தோன்றி, இது தேவனுடைய திட்டம் என்பதையும் மாம்சமாகுதலின் இரகசியத்தையும்  விளக்கினார் (மத்தேயு 1:20). அதாவது பிறக்கவிருக்கும் குழந்தை இயேசு, இம்மானுவேல், நம்மோடு இருக்கிற தேவன். அதனால் யோசேப்பு தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்பட்டு, மரியாளை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

சகரியா:
தேவபக்தியுள்ள தம்பதிகளான சகரியாவும் எலிசபெத்தும் ஒரு குழந்தைக்காக நீண்ட காலமாக ஜெபித்து, ஆசையுடன் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் வயதானது. எருசலேம் ஆலயத்தில் தூபம் செலுத்தும் பணியை செய்ய சகரியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் சேவை செய்து கொண்டிருந்தபோது, காப்ரியேல் தூதன் அவருக்குத் தோன்றினார். பயந்திருந்த சகரியாவை நோக்கி, “பயப்படாதே” என்று அவர் தைரியப்படுத்தினார். தேவன் அவர்களுக்கு ஒரு மகனை அளிப்பார்; அந்தக் குழந்தை, விரைவில் பிறக்கவிருக்கும் கர்த்தரையும் மேசியாவையும் வரவேற்கும் விதமாக, அவருக்குப் பாதையை ஆயத்தம் செய்பவனாக இருப்பான். தேவன் ஜெபங்களுக்கு பதிலளிப்பவரும், முன்பே அனைத்தையும் ஆயத்தம் செய்பவருமாக இருக்கிறார்! (லூக்கா 1:8–17).

மேய்ப்பர்கள்:
திடீரென வானத்தில் தேவதூதர்கள் தோன்றி, மேய்ப்பர்களை நோக்கி “பயப்படாதீர்கள்” என்று கூறினார்கள். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியான நற்செய்தியை அறிவித்தார்கள். தேவன் அளித்திருந்த இரட்சகரும் கர்த்தருமான வாக்குத்தத்தம் நிறைவேறியது; ஏனெனில் இயேசு பெத்லெகேமில் பிறந்தார் (லூக்கா 2:10–12).

நான் பயப்படுகிறேனா? அல்லது தேவனுடைய திட்டத்தையும், நோக்கத்தையும், வாக்குத்தத்தங்களையும் உணர்ந்து ஏற்றுக்கொள்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran