உதாசீனம்..ஒதுக்குதல்.. தனிமைப்படுத்துதல்

தேவ ஊழியர் ஒருவர் தன் பிள்ளைகள் சமூக பணிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாரம் ஒருமுறை குடிசைப் பகுதிக்கு அழைத்துச் செல்வார். அவர்கள் வளர ஆரம்பித்ததும் அப்பகுதிகளுக்கு செல்வதை விரும்பவில்லை; அவர்கள் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கு செல்பவர்கள், இந்த பழக்கங்கள் நாளடைவில் பிடிக்காமல் போயிற்று. அதுமாத்திரமல்ல, அந்த இடம் பிடிக்கவில்லை என்பதாகவும், அங்குள்ள குப்பைக் கூளங்களின்  துர்நாற்றம் தங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் எதிர்ப்புகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இருப்பினும், நம்மைச் சுற்றி ஏழைகள் இருப்பார்கள், அவர்களுக்கு உதவுவது கிறிஸ்தவ அன்பின் நிரூபணம் என்றும் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவது முற்றிலும் அவசியம் என்றும் அவர் அவர்களிடம் நற்காரியங்களை எடுத்துக்கூறி வளர்த்தார். அந்தக் குழந்தைகள் நன்கு வளர்ந்து பெரியவர்களாயினர்,  இப்போதோ ஏழைகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும்  மலைக்க வைக்கும் வண்ணம் சேவை செய்பவர்களானார்கள். 

நகரத்தில் உள்ள உயரடுக்கு மற்றும் பணக்காரர்கள் ஏழைகள், நடைபாதையில் வசிப்பவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.  ஏழைகள் மற்றவர்களிடமிருந்து தங்களைத் தாங்களே சமூகத்திடமிருந்து ஒதுங்கி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நகர மேம்பாட்டாளர்கள் ஏழைகளை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அது நகரத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக எண்ணுகிறார்கள். நகரத்தை சுத்தம் செய்பவர்கள், எளியவேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என போன்ற  ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் மற்றும் மோசமாகவும் நடத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், நகர மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆகியவற்றில் ஏழைகள் சமமாக பங்களிப்பவர்கள் என்று வேதாகமம்  நமக்குக் கற்பிக்கிறது. "ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்" (பிரசங்கி 9:14-16).

அதாவது நகரங்களில் நன்றியுணர்வு என்பதை காண முடிவதில்லை. யுத்தத்திலிருந்து நாட்டை மீட்ட வீரனுக்கு சிலை இல்லை, சரி அது கூட தேவையில்லை ஆனால் அந்த ஜனங்கள் அவரை நினைவில் கொள்ளவே இல்லை.  இன்றும் கூட நகரத்தில் உள்ள ஏழை மக்கள் நினைவுகூரப்படுவதில்லை, அங்கீகரிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதில்லை அல்லது பலன் அடைவதும் இல்லை.  மாறாக, அவர்கள் ஏளனம் செய்யப்படுகிறார்கள், வெறுக்கப்படுகிறார்கள், ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒரு போதகர் கூறினார்.  ஏனெனில் தேவன் ஏழை சீஷனை நம்ப முடியாது  ஆதலால் ஒரு பணக்காரனிடம் சரீரத்தைக் கொடுத்தார் என்று சொல்வது என்ன ஒரு பரிதாபகரமான முன்னுதாரணம் மற்றும் கேலிக்குரிய செழிப்பின் உபதேசமல்லவா?!

நான் ஏழைகளை கண்ணியமாக நடத்துகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran