இயேசு ஒரு வாளை அனுப்புகிறார்

ஈரானைச் சேர்ந்த உமர், ஒரு சீனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் நியூயார்க்கில் தங்கினர். அமெரிக்காவை வெறுத்த போதிலும், அவர் விரைவில் பணக்காரராகி, நிறையப் பணம் சம்பாதித்து, பிறகு ஈரானுக்குத் திரும்பி அங்கே குடியேற வேண்டும் என நினைத்தார்.
செல்வத்திற்கான ஆவல்:
 உமருக்கு ஒரு தெளிவான இலக்கு இருந்தது; விரைவில் பணக்காரராக வேண்டும். அதிகம் பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தார்.
வேதாகம வசனங்கள்:
ஒரு வெற்றிகரமான வியாபாரியாக ஆக வேண்டும் என்ற விருப்பத்தால், அவர் How to Win Friends and Influence People என்ற சுய முன்னேற்றப் புத்தகத்தை வாங்கினார். அது கிறிஸ்துவப் புத்தகமல்ல, ஆயினும் அதில் ஆசிரியர் வேதாகமத்தில் உள்ள சில வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தார். பின்னர், கிறிஸ்துவர் ஆன ஜிக் ஜிக்லர் எழுதிய How to be a Successful Salesman என்ற புத்தகத்தை வாங்கினார். அதிலும் வேதாகம வசனங்கள் நிறைய இருந்தன. அந்த வசனங்கள் அவரை கவர்ந்ததால், ரகசியமாக வேதாகமத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.
புதிய ஏற்பாட்டை வாங்குதல்:
நியூயார்க்கில் அவர் ஒரு புத்தகக் கடைக்குச் சென்றார். ஆனால் அங்கு வேதாகமம் கிடைக்கவில்லை. விற்பனையாளர் புதிய ஏற்பாடு கிடைக்கும் என்று கூறினார். அதை அவர் வாங்கி, தன் குடியிருப்பில் கொண்டு வந்து, கருத்தாக கவனம் செலுத்தி சிரத்தையுடன் தேவவார்த்தையை வாசிக்கத் தொடங்கினார்.
மத்தேயு சுவிசேஷம்:
புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு ஆகும். மத்தேயு, மேசியாவைப் பற்றி யூதர்களுக்கு விளக்குவதற்காக எழுதியிருந்ததையும். அவர் வம்சாவளியையும் படித்தார், பிறகு பாக்கியவான்கள் என்று அழைக்கப்படும் மலைப் பிரசங்கம் என்ற அற்புதமான போதனைகளைப் படித்தார். இவ்வாறு தேவன் அவருடைய இருதயத்தில் கிரியையை நடப்பித்தார். அவர் படிப்படியாக இரட்சகரை நோக்கி இழுக்கப்பட்டார்.
பட்டயம்:
சொந்த வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள் என்ற கர்த்தராகிய இயேசுவின் போதனையை உமர் வாசித்தபோது, குடும்பத்திற்குள் கர்த்தர் ஒரு பட்டயத்தை அனுப்பினார், என்று படித்த போது உமர் திகைத்துப் போனார் (மத்தேயு 10:34-39). அவர் முழங்காலில் நின்று இயேசுவே கர்த்தர் என்று ஒப்புக்கொண்டார். பின்னர், உமர் தனது சாட்சியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, ​​"நான் அவற்றைப் படித்தபோது, ​​இயேசு கடவுளாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் கடவுள் மட்டுமே தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து அப்படிப்பட்டதைக் கோருவார்" என்று கூறினார்.
சிலுவையும் பட்டயமும்:
 வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடைய கர்த்தர், சிலுவையையும் பட்டயத்தையும் தருகிறார் (மத்தேயு 28:18; 16:24-26). கர்த்தரைப் பின்பற்றத் தீர்மானிப்பவர்கள் மட்டுமே அதை ஏற்கத் தயாராக இருப்பார்கள்.
நான் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran