ஒரு நகரத்தில் சட்டமீறிகள்

ஒரு நகர நிர்வாகம், நகரத்தின் பெரும்பாலான சாலைகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்களில் பெரும் விளம்பரம் செய்தது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அபராதம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு அவர்களின் கைபேசிக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பைப் பெற்றவர்களில் சுமார் 20 சதவீதம் மட்டுமே அபராதம் செலுத்தினர். மீதமுள்ளவர்கள் அதை முழுமையாக புறக்கணித்தனர். அபராதம் வசூலிக்க நிர்வாகத்தால் வீடுகளுக்குச் சென்று நடவடிக்கை எடுக்கவோ, வாகனங்களைப் பறிமுதல் செய்யவோ முடியவில்லை. அதற்கான மனிதவளம் மற்றும் நிதி வசதி அவர்களிடம் இல்லை. இறுதியில், அந்தத் திட்டம் அமைதியாக கைவிடப்பட்டது. சட்டமீறல் மேலும் சட்டமீறலை உண்டாக்கும் என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் எச்சரிப்பை ரோமர் 6ம் அதிகாரத்தில் காண முடியும். 

மேலும் அதிகமான மீறல்கள்:
இதன் விளைவாக, நகரத்தின் போக்குவரத்து நிலை மேலும் மோசமடைந்தது. பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் CCTV கண்காணிப்புக்கும் இருந்த பயத்தை இழந்தனர். அதாவது, சட்டமீறல் மேலும் சட்டமீறலையே உருவாக்கியது. அதிகாரிகள் செயலற்றவர்களாக, “பற்கள் இல்லாத புலிகள்” போல இருந்தனர். பார்வைக்கு மட்டுமே அதிகாரம்; செயலில் ஒன்றுமில்லை. வேகமாக ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துகள் அனைத்தும் அதிகரித்தன.

சட்டத்தின் வரம்புகள்:
சட்டத்தால் மனிதர்களை மாற்றும் வல்லமை இல்லை. சட்டம் செய்யக்கூடியது என்னவென்றால் தவறு என்ன, மீறல் என்ன, பாவம் என்ன என்பதை உணர்த்துவது மட்டுமே. அது தண்டனை பற்றிய பயத்தையோ, விளைவுகளுக்கான அச்சத்தையோ உருவாக்கலாம். ஆனால் அது மனிதர்களின் இருதயத்தை மாற்ற முடியாது.

சீர்திருத்தம்:
சமூகம் மாற்றம் அடைய வேண்டுமென்றால், பாவத்தை உணரும் அறிவு, பாவத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலை, பாவத்தை விட்டு விலகி, புதிய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க விருப்பம்
இவை அவசியம். ஆனால் பல பண்பாடுகளில் பாவம் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அவர்கள் ஆவிக்குரிய குருடுத்தனத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் ஆவிக்குரிய ஒழுக்கமும் நீதியும் இல்லாததாக இருக்கிறது. உதாரணமாக, சதி என்ற பழக்கம்;  கணவன் இறந்தபின் மனைவியைச் சிதையில் எரிப்பது;  ஒரு கொலையாகவோ, பாவமாகவோ கருதப்படவில்லை. மாறாக, அது விசுவாசமும், விசுவாசத்திற்காக அர்ப்பணிப்பும், “புனிதமான ஆன்மீகம்” எனக் கருதப்பட்டது. அதனால், பல சமூகங்களும் நாடுகளும் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ளும் திறனை இழந்தன. எனவே, இருளில் மூழ்கிய அந்த பண்பாடுகளின் மேல் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நான் சட்டமீறலை விட்டு விலகி, ஒளியில் நடக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran