பல வகையான செல்வங்கள்

உலகில், பல விஷயங்கள் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று உடைமைகள். ஆனால் உலக செல்வங்களில் எதையும் நம்புவது பயனற்றது என சங்கீதம் 49ல் வாசிக்கலாம். 

உங்களிடம் என்ன இருக்கிறது? 
இது நிதி செல்வம், வருமானம், சேமிப்பு மற்றும் சொத்துகளைக் குறிக்கிறது. இந்தப் பணவளத்தைப் பலர் உயர்ந்ததாயும் சக்திவாய்ந்ததாயும் கருதுகிறார்கள், ஏனெனில் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்க முடியும்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இது ஒரு மனிதனுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தை அளிக்கும் தொழிலையோ வேலையையோ குறிக்கிறது. அத்தகையவர்கள் சமூக ரீதியாகவும், சில சமயங்களில் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு மிக்கவர்கள்.  

உங்களுக்கு என்ன தெரியும்?  
தகவல், அறிவு, அனுபவம், நிபுணத்துவம் மற்றும் ஞானம் ஆகியவை தேவையானவை.
உலகளாவிய இணையம் (World Wide Web) ஒரு திரைத் தொடுதலில் தகவல்களை வழங்குகிறது. ஆனால் சரியான தகவலை தேர்ந்தெடுக்கத் தேவையானது திறமையாகும்.
அனுபவம் என்பது அறிவைப் பெறும் மற்றொரு வழியாகும், இது வாழ்க்கையில் பயனளிக்கக்கூடியது.
ஒரு துறையில் முழுமையான அறிவைப் பெறுவது "நிபுணத்துவம்" என அழைக்கப்படுகிறது. ஞானம் என்பது, இந்த அனைத்தையும் அதாவது தகவல், அறிவு, அனுபவம், நிபுணத்துவம் ஆகியவற்றை தெய்வபக்தி மற்றும் நீதியுடன் இணைத்து பயன்படுத்துவதேயாகும்.

நீங்கள் எவ்வளவு தகுதியானவர்?
நல் ஆரோக்கியம் மிகுந்த செல்வம் (Health is wealth) என்பது எல்லோருக்கும் பரிச்சயமான பழமொழியாகும்.
நல்ல உடல், விழிப்புணர்வான மனம் ஆகியவை உண்மையான செல்வமாகும். இது வெறும் உடல் வலிமையை குறிக்கவில்லை; மனநலம் மற்றும் உணர்ச்சி நலமும் அதே அளவுக்கு முக்கியமானவை.

உங்களுக்கு எவ்வளவு வயது?
உலகம் பெரும்பாலும் இளைய தலைமுறையினருக்கானதாய் உருவாகி வருகிறது. அதில் டிஜிட்டல் பிளவு (Digital Divide) எனப்படும் வேறுபாடும் உள்ளது. 1985க்குப் பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வீகர்கள் (Digital Natives) என அழைக்கப்படுகிறார்கள்; இவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எளிதாகக் கையாளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு முந்தைய தலைமுறையினரை டிஜிட்டல் புலம்பெயர்ந்தவர்கள் (Digital Immigrants) என அழைப்பார்கள்; இவர்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள மிகவும் போராட வேண்டி இருக்கிறது.

நீங்கள் யார்?
நல்லொழுக்கமாக இருப்பது, நெறிமுறைகளை பின்பற்றுவது அல்லது நல்லவனாக இருப்பது ஒரு பெருந்தன்மையாகவும், செல்வமாகவும் கருதப்படுகிறது. ஆனால், சிலருக்கு நற்பெயர் இருக்கலாம்; இருப்பினும் அவர்கள் நேர்மையற்றவர்களாக இருக்கக்கூடும். அவர்களின் நடத்தை வெளியிலிருந்து மரியாதைக்குரியதாகவும், கண்ணியமாகவும், இனிமையாகவும், ஆவிக்குரிய நபர் போலவும் தோன்றலாம். ஆனால் அவர்கள் உண்மையில் வெளியில் வெண்மையாக்கப்பட்ட கல்லறைகள் போன்று காணப்படுகிறார்கள் (மத்தேயு 23:27).

விசுவாசத்தில் பணக்காரர்கள்:
சிலர் உலகத் தரவரிசையில் மற்றும் பொருளாதார ரீதியாக வறுமையுடன் இருக்கலாம். இருப்பினும், அவர்கள் விசுவாசத்தில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் வாரிசுகள் ஆவர் (யாக்கோபு 2:5). தங்கள் பாவங்களை மன்னிக்க உண்டான மனந்திரும்பலுடன், தங்களுக்காக சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு உயர்த்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிரிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் விசுவாசத்தில் செல்வந்தர்களாவார்கள். ஆம், சங்கீதம் 49 சொல்வது போல இரட்சிப்பை பணம் கொடுத்து வாங்க முடியாது அல்லது ஜீவனுள்ள தேவனுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. 

என்னை மன்னித்த, எனக்காக மரித்து மீண்டும் உயிர்ந்தெழுந்த ஜீவனுள்ள தேவன் மீதான விசுவாசத்தில் செல்வந்தனாக காணப்படுகிறேனா?  

Rev. Dr. J.N. Manokaran