முதிர்ச்சியடைந்த கன்னிகைகள்

புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் எண்ணெயை புத்தியற்ற கன்னிகைகளுக்குப் பகிர்ந்தளித்திருக்க வேண்டுமா? மற்ற ஐந்து பேருக்கு எண்ணெய் தர மறுப்பதில் அவர்கள் ஆவிக்குரிய பக்குவத்துடனும், உணர்வுரீதியான சமநிலையுடனும், உறுதியான மனநிலையுடனும் இருந்தார்களா? புத்தியுள்ளவர்கள் கூறியபடியே, புத்தியற்ற கன்னிகைகள் எண்ணெய் விற்கும் வியாபாரியைத் தேடிச் சென்றனர் (மத்தேயு 25:1-12). மணமகனும் அவர்தம் குழுவினரும் வருவதற்கான சத்தத்தைக் கேட்டதும், அந்தப் பத்து கன்னிகைகளும் அவரைச் சந்திக்க எழுந்தனர். மணமகனைச் சந்திக்கச் செல்லத் தங்களின் எண்ணெய் தீர்ந்துவிட்டதையோ அல்லது போதுமானதாக இல்லை என்பதையோ அந்த ஐந்து புத்தியற்ற கன்னிகைகள் உணர்ந்தனர். அவர்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகி, புத்தியுள்ளவர்கள் தாராள மனப்பான்மையுடனும், அக்கறையுடனும் எண்ணெயைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், புத்தியுள்ள கன்னிகைகள் முதிர்ச்சியுடன் செயல்பட்டதால், முதிர்ச்சியற்ற மற்றும் புத்தியற்ற கன்னிகைகளின் தந்திரங்களுக்கு இரையாகவில்லை.

மன்றாடுதல்:
தங்களிடமிருந்த எண்ணெயில் சிறிது தருமாறு அல்லது பகிர்ந்துகொள்ளுமாறு புத்தியற்ற கன்னிகைகள் புத்தியுள்ளவர்களிடம் மன்றாடினார்கள். எண்ணெயைப் பகிர்ந்துகொண்டால், இரு தரப்பினரிடமும் போதுமான எண்ணெய் இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் அனைவரும் ஆயத்தமற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் கூறி புத்தியுள்ள கன்னிகைகள் பணிவாக மறுத்துவிட்டனர்.

கெஞ்சுதல்:
மணமகன் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற தீவிர விருப்பத்தால், அவர்கள் கண்ணீருடன் கெஞ்சியிருக்கலாம். அது ஒரு உணர்வுபூர்வமான வேண்டுகோளாக இருந்தது.

கடன் கேட்டல்:
திருமண நிகழ்வுக்குப் பிறகோ அல்லது எதிர்காலத்திலோ திருப்பித் தரும் வகையில், சிறிது எண்ணெயைக் கடனாகத் தருமாறு புத்தியற்ற கன்னிகைகள் கேட்டிருக்கலாம்.

வலியுறுத்திக் கோருதல்:
"எங்களுக்கு உதவ முடியாவிட்டால், நட்பினால் என்ன பயன்?" நட்பின் அடிப்படையில், எண்ணெயைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர்கள் வற்புறுத்திக் கேட்டனர்.

மிரட்டுதல்:
"இப்போது எங்களுக்கு உதவாவிட்டால், அடுத்த முறை நாங்கள் உங்களுக்கு உதவமாட்டோம். அதனால் நீங்கள்தான் நஷ்டமடைவீர்கள்." புத்தியுள்ள கன்னிகைகள் அவர்களின் மிரட்டல்களுக்கும் பணியவில்லை.

குற்ற உணர்வை ஏற்படுத்துதல்:
தேவையிலிருப்பவர்கள் மீது புத்தியுள்ள கன்னிகைகள் அக்கறை காட்டவில்லை என்ற குற்ற உணர்வை புத்தியற்ற கன்னிகைகள் ஏற்படுத்த முயன்றிருக்கலாம்.  

பறிக்கவோ திருடவோ முடியவில்லை: 
புத்தியுள்ள கன்னிகைகள் விழிப்புடன் இருந்தார்கள். புத்தியற்ற கன்னிகைகளால் அவர்களிடமிருந்து அந்த எண்ணெயைப் பறிக்கவோ அல்லது திருடவோ முடியவில்லை. 

கொடுப்பதா அல்லது கொடுக்காததா: 
கொடுப்பது நல்லதுதான், ஆனால் எல்லாவற்றையும் கொடுத்துவிடவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது. ஆயத்தமாக இருப்பதைக் குறிக்கும் அந்த எண்ணெய் பொதுவான சொத்து அல்ல; அது ஒரு தனிப்பட்ட முயற்சியாகும். அந்த எண்ணெய் ஆவிக்குரிய ஆயத்தம், பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மற்றும் சாட்சி பகரும் வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. 

கிறிஸ்துவின் வருகைக்காக நான் ஆயத்தமாக இருக்கிறேனா? என் விளக்கில் ஆவிக்குரிய எண்ணெய் நிறைந்திருக்கிறதா?, இல்லையெனில், இன்று முதலே ஆண்டவரிடம் நெருங்கி, ஆவிக்குரிய விழிப்புடனும் ஆயத்தத்துடனும் வாழ்வோம். 

Rev. Dr. J.N. Manokaran