ஒரு தாய்ப்பறவை அதன் குட்டிகளுக்காக உணவைக் கொண்டு வருகிறது. தாயைப் பார்த்ததும் உடனே, அந்தக் குஞ்சுகள் வாயைத் திறந்து காத்திருக்கும். தாய்ப்பறவை தன் பிள்ளைகளின் வாயை உணவால் நிறைக்கும். இதுபோல், நம்முடைய வாய்களை நாம் அகலமாகத் திறந்தால், ஆண்டவரும் அதை நமக்காக நிரப்புவார் (சங்கீதம் 81:10).
மிகச் சிறிய தனிப்பட்ட அளவுகோல்:
தாய்ப்பறவையிடம் மிகுந்த உணவிருக்கும்; ஆனால் குட்டிக்குரிய வாயின் அளவுதான் அது எவ்வளவு பெறும் என்பதை தீர்மானிக்கிறது. ஸ்பர்ஜன் கூறுகிறார்: “கிண்ணம் சிறியது, ஆனால் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று நாம் தூற்றுகிறோம்.” தேவனுடைய வளங்கள் முடிவற்றவை. ஆனால், அவற்றைப் பெறும் மனிதர்களின் ஆற்றல் மிகவும் குறைவானது.
தேவையின் உணர்வு:
குழந்தை அழும்போது மட்டுமே, குழந்தைக்கு உணவளிக்கப்படுகிறது. அதுபோல், நாமும் தேவனை நாடி அழைக்க வேண்டும். நீதியும் சத்தியமும் மீதான பசியும் தாகமும் உள்ளவர்களே நிறைவடைவார்கள் என்றும், ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் (மத்தேயு 5:6) சொல்லப்பட்டுள்ளது.
பெரிய காரியங்கள்:
வாயை அகலமாகத் திறப்பது என்பது பெரிய காரியங்களை கேட்பதாகும். வில்லியம் கேரி இவ்வாறாக கூறினார், “தேவனுக்காக பெரிய காரியங்களை முயற்சி செய்யுங்கள், தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்”.
அழிந்து கொண்டிருக்கும் மக்களைக் குறித்து விசுவாசிகள் ஒரு பாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், தேவன் நமக்குள் அந்தப் பாரத்தையும், அக்கறையையும், இரக்கத்தையும் உருவாக்குவார். அந்தப் பாரத்துடன் நாம் தேவனை நாடி, பெரிய காரியங்களைச் செய்ய வேண்டிக் கொள்வோம்.
தேவனின் மகத்துவம்:
தேவனின் மகத்துவத்தையும், அவருடைய பண்புகளையும் உணரும் ஒருவர், வாயை அகலமாகத் திறப்பார். அது வணக்கத்திற்கும், போற்றுதலுக்கும் மட்டுமல்ல; மகத்தான தேவனுக்காக மகத்தான காரியங்களைச் செய்ய தேவனுடைய கருவிகளாக மாறுவதற்கும் ஆகும். தேவன் தமது சத்தியத்தை வெளிக்கொணரவும், வல்லமையை வெளிப்படுத்தவும், அவருடைய அன்பை உலகிற்கு தெரிவிக்கவும் நம்மை உபயோகிக்க விரும்புகிறார்.
அன்பும் இரக்கமும்:
எரிகோவின் புறநகரத்தில் இருந்த கண்குருடான ஒருவன், கர்த்தராகிய இயேசுவை அழைத்தான். அவன் தனது வாயைத் திறந்து, குரலை உயர்த்தி, தேவனின் இரக்கத்திற்கு மன்றாடினான். இரக்கமும் கிருபையும் உள்ள ஆண்டவர் தன்னை நிறுத்தி, அவன் கேட்ட பார்வையை அளித்தார் (மாற்கு 10:46-52). விசுவாசிகளாகிய நாமும் தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையும் இரக்கத்தையும் ஒவ்வொரு நாளும் நாட வேண்டும்.
நான் என் வாயைத் திறந்து அவரளிக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran