முழு இருதயத்தோடு ஸ்தோத்திரம்

சிலர் கர்த்தரை உதடுகளால் மட்டும் ஸ்தோத்திரிக்கிறார்கள்; அது அரைமனதோடு செய்யப்படும் ஸ்தோத்திரம். கர்த்தருக்கு அரைமனதோடு சீஷராக இருப்பது இயலாது. தாவீது கர்த்தருக்குத் தன் முழு இருதயத்தோடும் ஸ்தோத்திரம் செலுத்துகிறார் (சங்கீதம் 9:1–2). அதாவது, அவர் தன் முழு பெலத்தோடும், ஆத்துமாவோடும், ஆவியோடும் கர்த்தரை நேசித்து பாடுகிறார். தாவீது முழு இருதயத்தோடு கர்த்தரை ஸ்தோத்திரிப்பது எப்படி என்பதை மூன்று வழிகளில் நமக்கு கற்பிக்கிறார்.

1) அதிசயமான கிரியைகள்:
முழு இருதயத்தோடு செய்யப்படும் ஆராதனை என்பது, தேவனுடைய அதிசயமான கிரியைகளை நினைத்து, அவற்றை ஆச்சரியத்துடன் சிந்தித்து, அவரை ஸ்தோத்திரிப்பதாகும். அத்தகைய அதிசய கிரியைகள் குறைந்தது மூன்று உள்ளன. முதலாவதாக, தேவனுடைய மீட்பின் கிரியை.
மனந்திரும்பி கர்த்தரை ஏற்றுக்கொள்ளும் பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கும் இந்த கிரியை அதிசயமானது. தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்து, மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து கல்வாரி சிலுவையில் மரித்தார்; அடக்கம் செய்யப்பட்டார்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இன்றும் என்றும் உயிருடன் இருந்து, பாவமன்னிப்பையும் நித்திய இரட்சிப்பையும் அளிக்கிறார். இரண்டாவதாக, தேவன் தினந்தோறும் செய்கிற அதிசயங்கள். சூரியோதயம், சூரியஅஸ்தமனம், பருவகாலங்கள், தாவரங்களின் வளர்ச்சி போன்றவற்றைச் சுற்றிப் பார்க்கும்போது தேவனுடைய அற்புதங்களை காண்கிறோம். மேலும், தேவன் தமது பரிசுத்தவான்களின் ஜெபங்களுக்கு பதிலளித்து வல்லமையான செயல்களைச் செய்கிறார். உலகின் பல பகுதிகளில் தினந்தோறும் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது; பலர் இரட்சிக்கப்பட்டு திருச்சபையின் அங்கமாகிறார்கள். மூன்றாவதாக, வேதவசனங்களில் மறைந்திருக்கும் ஆழமான பொக்கிஷங்கள். அவை நமக்கு போதிக்கின்றன, ஊக்குவிக்கின்றன, மகிழ்விக்கின்றன. வேதவசனங்களை ஆழமாக ஆராயும் போது, பெரும் ஆவிக்குரிய கனிகளைப் பெற முடிகிறது.

2) மகிழ்ந்து களிகூருதல்:
கிறிஸ்தவர்கள் எந்நாளும் கர்த்தரில் மகிழ்ந்து களிகூர அழைக்கப்பட்டவர்கள் (பிலிப்பியர் 4:4). இந்த வசனத்தை அப்போஸ்தலனாகிய பவுல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எழுதினார். எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்வது கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசிகளுக்கே சாத்தியம். ஏனெனில் அந்த மகிழ்ச்சி, எல்லா ஆசீர்வாதங்களின் மூலமாகிய கர்த்தரிடமிருந்து வருகிறது. அவர் தமது பிள்ளைகளை நேசிக்கிறார்.

3) மகா உன்னத தேவனுடைய நாமம்:
முழு இருதயத்தோடான துதி என்பது தேவனுடைய பரிசுத்த உன்னதமான நாமத்தை உயர்த்துவதாகும். அவருடைய நாமம் அற்புதமானது. இரட்சிக்கப்படுவதற்காக வானத்தின் கீழே, மனிதர்களுக்குள் கொடுக்கப்பட்ட ஒரே நாமம் இயேசு கிறிஸ்துவே (அப்போஸ்தலர் 4:12). எல்லா முழங்கால்களும் முடங்கும், எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்யும் (பிலிப்பியர் 2:10-11). அவருடைய நாமம் ஒரு பலத்த துருகம்; நீதிமான்கள் அதற்குள் ஓடிப் புகுந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள் (நீதிமொழிகள் 18:10). பிசாசுகள் இயேசுவின் நாமத்தைக் கேட்டு நடுங்குகின்றன (யாக்கோபு 2:19).

நான் கர்த்தரை முழு இருதயத்தோடு ஸ்தோத்திரிக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran