ஆண்டவருக்குள் எப்பொழுதும் மகிழுங்கள்

பவுல் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டிருத்த போது பிலிப்பிலுள்ள விசுவாசிகளுக்கு, கர்த்தருக்குள் எப்போதும் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள் என்று எழுதுகிறார் (பிலிப்பியர் 4:4). இது நடைமுறையில் சாத்தியமா அல்லது நல்ல இலட்சியமா?  ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை எப்போதும் ஒரு நடைமுறை வாழ்க்கை முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

நிரபராதி, நீதிமான் என்ற அறிவிப்பு: 
எல்லா மனிதர்களும், ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினர் என்பதால் அனைவருமே பாவிகளே, ஆக நித்திய தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்.   இருப்பினும், விசுவாசிகளின் பாவங்களை மன்னித்து, அவர்களை நீதிமான்களாக அறிவிக்க மனிதகுலத்தின் சார்பாக பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் இயேசுவை அனுப்பினார் (ரோமர் 5:1-11). குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும், நிரபராதி என்று விடுவிக்கப்படும்போது, ​​சிலிர்த்து, மகிழ்ச்சியில் குதிப்பார், அதுபோல ஒவ்வொரு கிறிஸ்தவரும் பாவி என்ற பட்டத்தில் இருந்து விடுதலைப்பெற்ற தேவனின் இந்த மாபெரும் பரிசுக்காக எப்போதும் மகிழ்ச்சியடையலாம். 

அணுகல்:  
விசுவாசிகள் அவருடைய பிரசன்னத்திற்கு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்.   புனிதமான இடத்தைச் சுற்றி வருவதற்குக் கூட பலருக்கு அனுமதி மறுக்கப்படும்போது, தேவன் தம்முடைய பரிசுத்த நித்திய பிரசன்னத்தை அணுக அனுமதித்துள்ளாரே (சங்கீதம் 65:4). ஆமாம்! கிறிஸ்து மூலமாக விசுவாசிகளாகிய அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை கிடைக்கிறது (எபேசியர் 2:18).

ஒப்புதல்:  
ஒவ்வொரு ஆடுகளையும் பெயரால் அறிந்த மேய்ப்பரான தேவனால் சீஷர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள் (யோவான் 10:14,27-28). மேலும் அவர் தனது பிள்ளைகளை தனது அழகான உள்ளங்கையில் பொறித்துள்ளார், ஸ்மார்ட் போனில் அல்ல (ஏசாயா 49:16).

அங்கீகரித்தல்:  
தேவ பிள்ளைகள் வேதாகம ஜனங்கள்.  அவர்கள் வாசிக்கிறார்கள், படிக்கிறார்கள், தியானிக்கிறார்கள், மனப்பாடம் செய்கிறார்கள், தங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துகிறார்கள்.  எனவே, அவர்கள் இவ்வுலகில் நற்செயல்களைச் செய்யவும், உலகில் சத்தியத்தைப் போதிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்றுக்கொள்ளல்:  
திருச்சபை என்பது தேவனின் குடும்பம்.   அனைத்து விசுவாசிகளும் தேவனின் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; யாரும் நிராகரிக்கப்படுவதில்லை அல்லது துரத்தப்படுவதில்லை.  உலகில், அனைத்து மனிதர்களும் ஒரு நிறுவனம் அல்லது ஏதோ ஒன்றிலிருந்து, ஒரு சமூகத்திலிருந்தோ அல்லது மற்றொன்றிலிருந்து நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர்.   ஆனால், கிறிஸ்துவில், அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். 

மனப்பாங்கு:  
கிறிஸ்தவ மனப்பாங்கு என்பது பரிசுத்த ஆவியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.   இது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, இரக்கம், நற்குணம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகிய மனப்பான்மையே ஆவியின் கனியின் சான்றாகும் (கலாத்தியர் 5:22-23).

செயல்:  
உடைந்த மற்றும் விழுந்த உலகத்திற்கு நற்செய்தியின் தூதர்களாக நியமிக்கப்பட்டதால் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், மகிழ்ந்திருக்கவும் வேண்டும். இது மிகுந்த மகிழ்ச்சியின் செய்தி, மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டதும் கூட. 

நான் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran