கிறிஸ்தவ ஜீவியம் மூன்று பரிமாணங்களைக் கொண்டது. பாவியாகிய தனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்துக் கொள்வது; தேவனை மீட்பர் என்று அறிவது, மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய அருட்பணியைப் பற்றி தெரிந்து கொள்வது போன்றவையாகும். யோபு தன்னை நீதியுள்ளவனாகக் கருதினாலும், அவனுடைய துன்பம் நோக்கமில்லாமல் இருந்தபோதிலும், துன்பத்தை அனுபவித்தான். நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் போல் துன்பத்திலிருந்து விடுபடுவேன் என்பதை பின்னர் புரிந்துக்கொள்கிறான் (யோபு 23:10-11).
தேவனை அறிதல்:
யோபுவை தன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி தேவன் கேட்டபோது, யோபுவால் பதிலளிக்க முடியவில்லை. தேவனுடைய வல்லமையையும், அதிகாரத்தையும் அளவிட முடியாது. மேலும் தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துகிறார். ஆம், தேவனுக்கு அப்பாற்பட்ட அறிவுரையோ யோசனையோ புத்தியோ இல்லை (யோபு 42:1-2). தேவனைப் பற்றி அறிந்ததும், அவருடைய சத்தத்தைக் கேட்டதும், வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டமும், தனக்குள்ளேயும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. உலகில், பெரும்பாலான மக்கள் தேவன், அவரது பண்புகள், அவரது எதிர்பார்ப்புகள் மற்றும் சித்தத்தை அறியவில்லை. தேவனின் பரிசுத்தத்தை அறியாமல், பாவத்தில் மூழ்குகிறார்கள். அவருடைய நீதியை அறியாமல், அநீதியிலும் அநியாயங்களிலும் ஈடுபடுகிறார்கள். அவருடைய அன்பை அறியாமல், வெறுப்பிலும் இருளிலும் வாழ்கின்றனர்.
தன்னை அறிதல்:
எந்தவொரு நபருக்கும், தான் ஒரு பாவி என்பதை உணர்ந்துகொள்வது மிகப்பெரிய ஆவிக்குரியக் கண்டுபிடிப்பு ஆகும். தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தில் யோபு உண்மையைப் புரிந்துகொண்டான். அவன் தனது அசுத்தத்தை உணர்ந்து மனந்திரும்பினான்; “கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான் (யோபு 42:6). கர்த்தர் யோபை மன்னித்து ஏற்றுக்கொண்டார். உலகில் பலர் தங்களுக்குள் ‘கடவுளை’ கண்டுபிடிக்க விரும்புகிறார்கள், இது ஒரு வீண் வேலை. எல்லா மனிதர்களும் பாவிகள், தாங்கள் பாவிகள் என்பதை ஒப்புக்கொள்ளும் மனத்தாழ்மை அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்த உணர்தல் இல்லாமல், அவர்கள் உண்மையான கடவுளையோ மீட்பரையோ தேட முடியாது.
தேவனின் நோக்கத்தை அறிதல்:
கிறிஸ்தவ ஜீவியம் இரட்சிப்போடு முடிவதில்லை, செய்ய ஒரு பணி உள்ளது. யோபு பக்குவமடைய வேண்டியிருந்தது, அதனால் அவர் தனது நண்பர்களுக்காக ஜெபிக்கவும் பரிந்துரை செய்யவும் தயாராக இருந்தார். அவர்கள் அறியாதவர்கள், கடவுளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள், துக்ககரமான ஆறுதல் அளிப்பவர்கள் (யோபு 16:2), யோபுவைக் கண்டித்தார்கள், ஆனால் தாங்களே மனந்திரும்ப வேண்டியிருந்தது. யோபுவின் சிறையிருப்பு மாற்றப்பட்டது, அவன் மனந்திரும்பியபோது அல்ல, மாறாக அவன் தன் நண்பர்களுக்காகப் பரிந்துபேசி ஜெபித்தபோது சூழ்நிலைகள் மாறியது (யோபு 42:10). ஒரு விசுவாசி மற்றவர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிக்கும்போதும், தேவனின் மாபெரும் ஆணையில் ஈடுபடும்போதும், தேவனின் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் அந்நபர் மீது வருகின்றன.
நான் ஒரு அருட்பணியுடனான இரட்சிக்கப்பட்ட பாவி என்பது எனக்குத் தெரியுமா?
Rev. Dr. J.N. Manokaran