வெளிப்படுத்தின விசேஷம் 5-  விளக்கவுரை


அதிகாரம் 5: ஆட்டுக்குட்டியானவரும் முத்திரிக்கப்பட்ட புத்தகமும்

முதல் மூன்று அதிகாரங்களில் பூமியிலுள்ள சபைகளின் நடுவில் உலாவினவரை பரலோகத்தில் இருக்கக்கண்டான். 4ம் அதிகாரத்தில் சிங்காசனத்தில் வீற்றிருந்த ஒருவரைக்கண்ட யோவான் இந்த 5ம் அதிகாரத்தில் அவர் கையிலிருத்த,உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைக் கண்டான். இதே போன்றதொரு தரிசனத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசியும் கண்டான் எசேக்கியேல் 2:9,10. அப்பொழுது இதோ என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக்கண்டேன். அந்தக்கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது, அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதிலே உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது, யோவானுக்கு எழுதப்பட்டிருந்த வைகள் காட்டப்படவில்லை. ஏனென்றால் சம்பவிக்கப் போகிறவைகளை யோவான் பார்க்கப் போகிறான்.

வ 4 ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும்,அதைப்பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினாலே நான் மிகவும் அழுதேன்.

வ 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி,நீ அழ வேண்டாம். யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும், அதன் ஏழு முத்திரைகளை உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

யோவான் ஒருவருமில்லையென்று அழுதான். ஆனால் மூப்பர்களில் ஒருவன் சொன்னான், “இங்கே ஒருவர் இருக்கிறார்?” (நாமும் பிரச்சனை நேரங்களில் பிரச்சனையைத் தீர்க்க ஒருவருமில்லையென்று அழுகிறோம். இயேசு எனும் ஒருவர் இருப்பதை மறந்து விட்டோம்.)

யூதா கோத்திரத்து சிங்கம் (ஆதி, 49;9)

தாவீதின் வேருமானவர் (ஏசாயா 11:1-5) இரண்டுமே இயேசுவையும் அவருடைய மனுடாவதாரத்தையும் குறிக்கும் இரட்சகராக தாவீதின் வம்சத்திலும் ஊரிலும் பிறந்தார், சிலுவையிலே பாவத்திற்கான தண்டனையைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு மீட்பின் கிரயமாக பரிசுத்த ரத்தத்தைச் சிந்தி சாத்தானை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். ஆகவே அவர் புத்தகத்தை திறக்கவும், அதின் ஏழு முத்திரைகளை உடைக்கவும் பாத்திரர் என்று மூப்பரில் ஒருவன் கூறினான்.

வ 6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன். அதற்கு ஏழு கொம்புகளும், ஏழு கண்களுமிருந்தது.

மனிதனை சிருஷ்டிக்கு முன்னரே அவனுடைய மீட்பும் திட்டமிடப்பட்டது ஆதி. 3:15).

இதையேதான் யோவான் இயேசுவைக் கண்ட போது “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்றான் (யோ.1:29, 36)

ஏழு கொம்புகள் கொம்பு வல்லமையையும் (உபா.33:17) சர்வ வல்லமையுடையவர் மகிமையையும் குறிக்கும் 1சாமு. 2:1)

ஏழுகண்கள் ஏழு ஆவிகளையும் குறிக்கும்: எல்லாவற்றையும், மனிதருள்ளத்திலிருப்பதையும் அறிந்தவர்- சர்வஞானி

வ 7 ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். இயேசு ஒருவரே வாங்குவதற்குப் பாத்திரர், அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லப்படவில்லை. ஆனால் உலகத்தின் முடிவுகாலச் சம்பவங்களாயிருக்கலாமென நம்பலாம், ஏனெனில் அதைக்காட்டவே யோவானைப் பரலோகத்திற்கு ஏறிவரச்சொன்னார்.

வ 8  ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை வாங்கினது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனால்தான் ஜீவன்களும் மூப்பர்களும் அவரைப் புகழ்ந்து பாடினார்கள். மூப்பர்களிடம் சுரமண்டலங்களும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களும் இருந்தன.

பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள்: இது பதில் கிடைக்காத ஜெபங்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் பதிலளிக்கப்பட்ட ஜெபங்கள் இன்னும் தேவ சமூகத்தில் இருக்கத் தேவையில்லை, “கர்த்தராகிய இயேசுவே வாரும் என்கிற ஜெபத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, பதில் கிடைக்காத நமது ஜெபங்களும் காலம் நிறைவேறும் வரை தேவ சமூகத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது, சகரியா என்றோ செய்த ஜெபத்திற்கு. முதிர்வயதில் பதில் வந்தது; அதுவரை அது பரலோகத்தில்தான் இருந்தது லூ.1:13

வ 9-10 புதிய பாட்டு
மூப்பர்களின் பாட்டு எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்.

“நாங்கள் பூமியிலே அரசாளுவோம் “ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை வாங்கினபடியால் சாத்தானின் ராஜ்யம் அழிக்கப்பட்டு பூமியிலே தேவனுடைய ராஜ்யம் ஏற்படும். அதிலே நாங்கள் ஆளுகை செய்வோம் என்ற நம்பிக்கையிலே பாடினார்கள்.

வ 11-12 தூதர்களின் பாட்டு
பதினாயிரங்களான தூதர்கள் ஆட்டுக்குட்டியானவர் சாத்தானை ஜெயிப்பதை எதிர்பார்த்து, 'வல்லமையையும், ஐசுவரியத்தையும்,ஞானத்தையும்,பெலத்தையும், கனத்தையும்,மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர்” என்று பாடினார்கள். சாத்தான் அழிவது தூதருக்கும் சந்தோஷம், (உங்களுக்கு?)

வ 13-14 சிருஷ்டியின் பாட்டு: வானத்திலும், பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும் ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று பாடினார்கள். நான்கு ஜீவன்களும், 24 மூப்பர்களும் ஆமென் என்று சொல்லி தேவனைத் தொழுது கொண்டார்கள். சிருஷ்டி ஏங்கித்தவித்த சத்தானின் அடிமைத்தனத்தினின்று விடுதலை கொடுத்ததினால் சிருஷ்டி பாடியது.

Author: Rev. S.C. Edison


Author: Rev. S.C. Edison